நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூ டியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறாகப் பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்க சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும் என நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், சிங்கமுத்து தரப்பில், பதிலுரை தாக்கல் செய்யப்படாததால், வடிவேலு தரப்பு வாதத்தின் அடிப்படையில், சிங்கமுத்துக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்றும் சிங்கமுத்து தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. குமரேஷ் பாபு, பிரதான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டார்.
மேலும் சிங்கமுத்து தரப்புக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை வடிவேலு தரப்புக்குச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.