ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஸ்வரி சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜன சங்கத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் முகர்ஜியின் நினைவு நாளில் ஈரோட்டில் பேசுவதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். ஷாம் சுந்தர்ஜியின் மறுபிறவியாகப் பிரதமர் மோடி பாரத நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவாத 500 சட்டங்களை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஈரோட்டில் இருந்து ராஜஸ்தானின் பிகானேருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.