ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ நாராயண குருதேவ் மற்றும் மகாத்மா காந்தி இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடலின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி இடையேயான சந்திப்பு இன்றும் ஊக்கமளித்து வருகிறது எனத் தெரிவித்தார்.
ஸ்ரீ நாராயண் குருவின் கொள்கைகள் அனைத்து மனிதக் குலத்திற்கும் ஒரு பெரிய பொக்கிஷம் என்றும், தேசத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுபவர்களுக்கு ஸ்ரீ நாராயண் குரு, ஒரு வழிகாட்டும் ஒளி போன்றவர் எனவும் கூறினார்.
நமது நாடு சிரமங்களின் சுழலில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஆளுமைகள் பிறக்கின்றனர் என்றும், அவர்களில் சிலர் ஆன்மீக மேம்பாட்டிற்காகவும், மற்றவர்கள் சமூகத்தைச் சீர்திருத்தத்திற்கும் உழைக்கின்றனர் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.