திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓத கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என வியனரசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி திருமுறை பாடுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.