சென்னை தி நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பற்றியும், அதனால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர் கே புரத்தில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான் இவை. 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் உயிர்பயத்துடனே வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
முழுவதும் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கும் இக்குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது. வீடுகளுக்குள் இருக்கும் மேற்கூரை பூச்சு அடிக்கடி விழுந்து குழந்தை முதல் பெரியவர்கள் வரை காயமடையும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது.
ஒவ்வொருமுறை மேற்கூரை இடிந்து விபத்திற்குள்ளாகும் போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வதும், புதிய குடியிருப்பு ஏற்படுத்துவதற்கான கணக்கெடுப்பு நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனுமில்லை என அக்குடியிருப்புவாசிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்
மழைக்காலம் நெருங்கும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே இடிந்து விழக்கூடிய ஆபத்து இருப்பதால் தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணத்தை வைத்தே பூச்சு வேலை பார்த்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
50 ஆண்டுகளை கடந்து ஆபத்தான நிலையில் இருக்கும் குடியிருப்பை இடித்துவிட்டு புதிய வீடுகட்டுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் எனவும், புதிய குடியிருப்பு கட்டப்படுவதற்கான கால அவகாசத்திற்கு தங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும் ஆர் கே புரம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.