தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்காக 141 கோடியே 22 லட்ச ரூபாயை அரசு தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளதாக கே.டி.வி. என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழங்க வேண்டிய தொகை தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட வண்ணமாக இருப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?, வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? எனவும் மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை ஏதேனும் நிலவுகிறதா? என்றும் அரசு தரப்புக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது அரசை நடத்தும் சரியான வழியல்ல எனக் கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.