கிருஷ்ணகிரி மாவட்டம் எக்கூர் பகுதியில் நிலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளச் சென்றவர்களை அரிவாளால் தாக்க வந்த உறவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கலைமதி மற்றும் அவரது மகன் ஜெகன் ஆகியோர் விவசாயம் பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களது உறவினர் மணி என்பவர் தமக்குத் தர வேண்டிய 10 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கிய பிறகு நிலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுங்கள் எனக்கூறி, அரிவாளுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதையடுத்து ஜெகன் மற்றும் அவரது தாய் கலைமதி ஆகியோர் வீடியோ ஆதாரத்துடன் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் மணி மீது புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள மணியை போலீசார் தேடி வருகின்றனர்.