கோவில்பட்டியில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, தவறி விழுந்து நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி கொண்ட இளைஞர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த வீரபிரசாத் என்பவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வீரபிரசாத் வந்துள்ளார்.
வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக வந்த அந்தியோதயா விரைவு ரயிலில் ஏற வீரபிரசாத் முயன்றுள்ளார். ரயில் நிற்பதற்குள் ஏற முயன்ற வீரபிரசாத் கால் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படாத நிலையில், நடைமேடையை இயந்திரம் மூலம் உடைத்து வீரபிரசாத்தை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.
பின்னர், கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட வீரபிரசாத் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால், அந்தியோதயா விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.