மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் சில நாட்களுக்கு முன் மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம் அரங்கேறி உள்ளது.
வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கன்பட்டி பொது மயானத்தில் இட வசதி இல்லாததால் ஏற்கனவே இறந்தவர்களின் உடல் மீது மற்றவர் உடல்களை புதைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவர் இறந்ததால் உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக மயானத்தில் குழி தோண்டும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது சில நாட்களுக்கு முன் இறந்தவர் உடலை இடவசதி இல்லாத காரணத்தால் மயானத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அஜாக்கிரதையாக மயான சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த வழியாக சென்றவர்கள் அழுகிய நிலையில் கிடந்த பிரேதத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கு புதிதாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டுள்ள மின்மயானம் பல மாதங்களாக திறக்காமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.