விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூமாப்பட்டி கிராமம் தனி ஒரு இளைஞரின் தொடர் முயற்சியால் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கூமாப்பட்டியில் அப்படி என்ன இருக்கிறது ? உலகளவில் ட்ரெண்ட் ஆனது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கோடை விடுமுறை வந்துவிட்டாலே நண்பர்களோ, குடும்பத்தினரோ ஒன்று சேர்ந்து சுற்றுலா செல்ல வேண்டும் மனநிலை மக்கள் மத்தியில் வாடிக்கையாகிவிட்டது. மன அழுத்தத்தை போக்கவும், மகிழ்ச்சியுடன் இருக்கவும் அவசியமாகிப் போன பயணத்தை மேற்கொள்வதையும், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் தான் தற்போதைய ட்ரெண்ட்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என மலையும் மலைசார்ந்த பகுதி மட்டுமே மக்களின் விருப்பமாக இருந்த நிலையில் தற்போது புதிய ஊர் ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூமாப்பட்டி தான் அந்த ஊர்.
சுற்றுலாவையும் சுற்றுலாத்தளங்களையும் மேம்படுத்த பல்வேறு பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில் தனி ஒரு நபர் கூமாப்பட்டியை இன்ஸ்டாகிராம் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆக்கியிருக்கிறார். உங்களுக்குக் காதல் தோல்வியா? மன அழுத்தமா? வாழ்க்கையை வாழவே கஷ்டமா இருக்கா ? தீராத பிரச்னையா? இப்படி எந்த பிரச்சனையா இருந்தாலும் கூமா பட்டிக்கு வந்துட்டு நிம்மதியா போங்க என அழைப்பு விடுக்கும் அந்த இளைஞரின் வீடியோ தான் இன்றைய இன்ஸ்டாகிராமின் டாப் நாட்ச்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் இந்த கூமாபட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கூமாப்பட்டிக்கு அருகே இருக்கும் பிளவக்கல் அணையைச் சுற்றிலும் மலைகள் நிறைந்து ரம்மியான சூழல் நிறைந்திருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை இயற்கை அழகை ரசிக்கவும், அமைதியான சூழலை உணரவும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது.
அக்கிராமத்தில் உள்ள வயல்வெளிகள், நீர்நிலைகள், கிணறுகள், வாய்க்கால்கள், செங்கல் சூளைகள் என ஒவ்வொரு பகுதியில் அவர் எடுத்த வீடியோக்கள் தான் இன்றைக்கு இன்ஸ்டாகிராம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது. கூமாப்பட்டியின் ஹேஸ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி கூமாப்பட்டி எங்கிருக்கிறது ? அங்கு என்னவெல்லாம் இருக்கிறது என்று தேடக்கூடியவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதோடு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கூமாப்பட்டியை நோக்கிய தங்களின் பயணத்தைத் தொடங்கி அதனை வீடியோவாக சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். இயற்கையை நேசிப்பவர்கள், அமைதியை விரும்புவோர், நண்பர்களுடன் நல்ல ஒரு இடத்திற்குச் சென்று வர வேண்டும் என நினைப்போர் அனைவரும் ஒருமுறையாவது கூமாப்பட்டிக்கு வந்து செல்ல வேண்டும் என்ற இளைஞரின் அழைப்பு கூமாப்பட்டியை உலகளவில் பேமஸ் அடையச் செய்திருக்கிறது.
சுற்றுலாத்தளங்களை கண்டறிந்து அதன் வசதிகளை மேம்படுத்தி பார்வையாளர்களை இழுக்க சுற்றுலாத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில் தனி ஒரு நபர் தன் இன்ஸ்டாகிராம் வீடியோக்களின் மூலமாக மட்டுமே உலகளவில் கொண்டு சேர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.