அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது.
அந்த விமானம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், பயணிகள், பொதுமக்கள் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த தரவுகளைப் பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் விமான விபத்துக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.