திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்களை முன் வைக்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும் என்று கூறிய நீதிபதி, எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை எப்படி அமல்படுத்த முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார்.
திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்று தெரிவித்த நீதிபதி, சாத்தியமில்லாத கோரிக்கையை மனுதாரர் கோரி இருக்கிறார் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.