அரியலூரில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் வ.உ.சி நகரைச் சேர்ந்த முருகன், சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, ஈரோட்டில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெறுவதற்காகச் சென்றார்.
அப்போது, சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மூளைச்சாவு அடைந்ததால், அவருடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்யப் பெற்றோர் ஒப்புக் கொண்டனர்.
பின்னர், மஞ்சுவின் இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இதனை அடுத்து, மஞ்சுவின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.