ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே நூதன முறையில் ஒரு கோடி ரூபாய் பணத்தை அபரித்த விவகாரத்தில் தொடர்புடைய 5பேரைப் போலீசார் கைது செய்தனர்.
சூலூர்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபரான ஜெகதீஷ் என்பவரை அணுகிய மோசடி கும்பல், அவசரகாரணங்களுக்காகத் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், ஒரு கோடி ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், இரண்டு கோடி ரூபாய்க்கு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர், அந்தப் பணத்தை ஒரு சில மாதங்களில் சட்டரீதியாகமாற்றிக் கொடுப்பதாகவும் நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பி ஜெகதீஷும் அவரது கூட்டாளிகளும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளுடன் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம கும்பல், ஒரு கோடி ரூபாயை அபகரித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 73 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.