மதுரை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக மண்டலத் தலைவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியார் கட்டடங்களுக்கான வரி வசூல் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், மதுரை மாநகராட்சி 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்தலால் வரிவிதிப்பு குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 8 லட்சம் ரூபாய் வரிவிதிப்பு இருக்க கூடிய கட்டடங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரி செலுத்தினால் போதும் என்ற அளவிற்கு வரிக்குறைப்பு செய்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இது போன்ற ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு வரி விதிப்பில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வரி குறைப்பு விவகாரத்தில் சங்கிலி தொடர் விசாரணையால், அதிகாரிகள் முதல் ஆளும் கட்சியினர் வரை கைதாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.