கோயில் திருவிழாவின்போது எந்தவிதச் சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில், நெல்லையப்பர்க் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவில் சாதி ரீதியான அடையாளங்கள் காண்பிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அதனடிப்படையில் காவல்துறை மற்றும் அறநிலைய துறை இணைந்து, திருவிழாவின்போது எந்தவிதச் சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர்த் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.