மகளிர்த் தினத்தன்று கோரிக்கை வைத்த ஏழைப் பெண்ணுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் ஆட்டோ வழங்கியுள்ளார்.
சென்னைக் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது சொந்த நிதியில் இருந்து அமலா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநருக்குப் புதிதாக ஆட்டோ ஒன்றை வழங்கினார்.
அப்போது உதவியாக வழங்கிய ஆட்டோவை அமலா இயக்கிட ஆளுநர் ஆர்.என் ரவி முதல் பயணத்தை மேற்கொண்டார். உடன் அமலாவின் இரு பெண் குழந்தைகளும் பயணித்தனர்.
இதையடுத்துப் பேட்டியளித்த பெண் ஆட்டோ ஓட்டுநர் அமலா, செங்கல்பட்டு மாவட்டம் விளம்பூர்க் கிராமத்தை சேர்ந்த தான், வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மகளிர்த் தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றபோது சொந்த ஆட்டோ வாங்க உதவ வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்த நிலையில், தனது கனவு நனவாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆளுநர்த் தனது சொந்த நிதியிலேயே ஆட்டோ வழங்கியதற்கு மிக்க நன்றி என்றும் கூறினார். மேலும், இதன் மூலம், ஆட்டோ வாடகைக்காக வழங்கி வந்த தொகையைத் தற்போது சேமிக்க முடியும் என்றும், தன்னுடைய பெண் குழந்தைகளை நன்கு படிக்க வைக்க முடியும் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.