ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலனாக, ரயில்வே போலிசாருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வரும் டைகர் நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சென்னைச் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அறிவிக்கப்படாத காவலாளியாகச் செயல்பட்டு வரும் டைகர்க் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் பிரதானமாகத் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பாக ஏராளமான ரயில்வே போலீசார்ப் பணியாற்றிவரும் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது டைகர் என அழைக்கப்படும் இந்த நாய்.
இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் குட்டி நாயாக இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாய்க்கு உணவளித்த ரயில்வே போலீசாருக்கு நன்றிக்கடன் வழங்கும் வகையில் அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.
தினந்தோறும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசாருடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த டைகர், பகல் நேரத்தில் ஓய்வெடுக்கக் காவல்நிலையத்தையே பயன்படுத்தி வருகிறது.
ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்களில் கவனக்குறைவாகப் பயணிகள் யாரேனும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அவர்களைக் கடிப்பது போல குரைத்து அவர்களே உள்ளே அனுப்பும் பணியையும் டைகர்ச் செய்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தங்க சங்கிலி பறிப்பு தொடர்புடைய ஒருவரை ரயில்வே போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, தப்பிக்க முயன்ற திருடனைத் துரத்தி பிடித்ததும் இதே டைகர் நாய்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னை மாநகர் முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டைகரை மட்டும் பிடிப்பதில்லை. ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலான, ரயில்வே போலீசாருக்கு உற்ற நண்பனாகப் பணியாற்றி வரும் டைகர் நாய் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.