பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக மகாராஷ்டிராவிற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும், உத்தராகண்டிற்கு மாநில இணை அமைச்சர் ஹரீஷ் மல்ஹோத்ராவும், மேற்குவங்கத்திற்கு பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் புதிய மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய தலைவராக இருக்கும் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த போதும், அவருக்கு ஓராண்டு பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.