காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜெகன் மூர்த்தி தரப்பில், கடத்தல் சம்பவத்திற்கும் ஜெகன்மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் காவல்துறை அவரை சேர்த்துள்ளதாக வாதிடப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறை தரப்பில், ஒட்டு மொத்த கடத்தல் சம்பவத்துக்கும் மூளையாக செயல்பட்டது ஜெகன் மூர்த்தி தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜெகன் மூர்த்திக்கும், ஏடிஜிபி ஜெயராமனுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதால் முன் ஜாமின் வழங்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.