மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 85 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73 ஆயிரத்து 452 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 116.89 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 88.59 டிஎம்சி ஆக உள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஒரு சில தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.