அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவனை ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியதால் ஆசிட் பாட்டில் உடைந்து படுகாயமடைந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னைச் சேத்துப்பட்டு மெக்னிக்கல் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பாலாஜி என்பவரின் மகன் அஸ்வின் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது மாணவன் அஸ்வினை, ஆய்வகத்தில் இருந்த ரசாயன பொருட்களைக் கொண்டு செல்ல ஆசிரியர்கள் கூறியதாகத் தெரிகிறது.
அப்போது ரசாயன பாட்டில் உடைந்து அஸ்வின் படுகாயமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஆபத்தான வகையில் பணியில் ஈடுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் சந்தியா வலியுறுத்தியுள்ளார்.