திமுகக் கூட்டணியில் இருக்கும் மதிமுகவையும், விசிகவையும் வெளியேற்றிவிட்டுப் பாமகவை இணைக்கக் காங்கிரஸை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக திமுக மீது விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும், கூட்டணிக் கட்சிகள் அளிக்கும் நெருக்கடியும் திமுகவைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தேசியக் கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளும் தயாராகிவருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கைகோர்த்திருப்பதன் மூலம் அதிமுகக் கூட்டணி வலுவடைந்திருக்கிறது. அதிமுகத் தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்திருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் எனக் கடந்த முறைத் தேர்தலை சந்தித்த அதே கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருந்த திமுகவின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் எழத்தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் எனத் தொடங்கி வைத்த உரிமைக்குரல், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக வரை விரிவடையத் தொடங்கியிருக்கிறது. கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த குரல் கொடுப்பது திமுகத் தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி பொதுக்குழுவைக் கூட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.
அதிமுக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியை எதிர்ப்பதோடு, தங்கள் கூட்டணிக்குள்ளாகவே உருவாகியிருக்கும் சலசலப்பைச் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு எழுந்துள்ளது.
மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவுக்கான ராஜ்யசபா உறுப்பினர்ப் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என மதிமுகவினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால் அந்தப் பதவி மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டதால் மதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்தக் கொந்தளிப்பே, அதிருப்தி இருந்தாலும் கூட்டணியில் தொடர்கிறோம் எனத் துரை வைகோ வெளிப்படையாகவே பேசும் சூழலை ஏற்படுத்தியது. துரைவைகோவின் பேச்சையடுத்து மதிமுகவை உடைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகவே 2021 ஆம் ஆண்டு பல்லடம் தொகுதியில் மதிமுகச் சார்பாக போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுகச் செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோரைக் கட்சியில் இணைத்தது திமுகத் தலைமை. அதனால், மதிமுகக் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 174 தொகுதிகளில் திமுக நேரடியாகக் களமிறங்கியது. இந்தமுறையும் 174 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என திமுகத் தலைமை நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளைப் பார்க்கும் போது திமுகப் போட்டியிடும் தொகுதிகள் 150க்கும் குறையும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகப் புதிய கட்சிகளைக் கூட்டணிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளைத் திமுக தொடங்கியுள்ளது. இரட்டை இலக்க எண் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், பெரிய அளவிலான வாக்குவங்கி இல்லாத மதிமுகவையும் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டுவிட்டு வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் பாமகவைக் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
பாமகவைக் கூட்டணியில் இணைப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியைத் திமுகவை பகடைக்காயாகப் பயன்படுத்தி வருவதாகவும் விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் தந்தை, மகனுக்கும் இடையிலான உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி பாமக நிறுவனர் ராமதாசுக்கு கூட்டணியில் இணைய செல்வபெருந்தகையைத் திமுக தூது அனுப்பியிருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மற்றொரு புறம் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியும், அதிமுக – பாஜக அமைத்திருக்கும் வலுவான கூட்டணியும் திமுகத் தலைமையை திக்குமுக்காடச் செய்திருக்கிறது.
கட்சித் தலைமை மற்றும் அமைச்சர்கள் மீது தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி எழுந்திருக்கும் நிலையில், வாரத்திற்கு ஒருமுறை மடல் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தொண்டர்களை நேரடியாகச் சந்தித்து பேசும் அளவிற்கான பயமும் உருவாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியைச் சமாளிக்க திமுக மேற்கொள்ளும் நடவடிக்கை வருங்காலங்களில் பயனளிக்குமா? எதிர்க்கட்சிகளின் பலத்தைத் திமுகவால் சமாளிக்க முடியுமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் அமையும் தேர்தல் களமே விடையாக அமையும்.