மும்பையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.
புறநகர் பகுதியான குர்லா குடியிருப்போர் சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள மசூதிகளில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதிக சப்தம் எழுவதால் இதய நோயாளிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை மட்டுமின்றி இது நாள்தோறும் பல தடவை தொடர்வதாகவும் கூறினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒலி மாசு விதியை மீறும் ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மும்பையில் வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த, 1,500 ஒலிபெருக்கிகளை போலீசார் அகற்றினர்.
ஒலி பெருக்கிகளை அகற்றும் முன் சமுதாய மற்றும் மதத்தலைவர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டதாக மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பர்தி தெரிவித்துள்ளார். எனினும் மத விழாக்களின் போது ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்த தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.