மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்தில் கடந்த 25ம் தேதி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்த மாணவியின் புகாரின் பேரில், கல்லூரி ஊழியர், பாதுகாவலர் மற்றும் இரு மாணவர்கள் என 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையிலேயே, தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அமைச்சரும், மேற்குவங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் தலைமையிலான பாஜகவினர் சட்டக் கல்லூரியை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்தனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்திற்கு சட்டக் கல்லூரி மாணவி சென்றிருக்காவிட்டால் பாலியல் வன்கொடுமையே நிகழ்ந்திருக்காது எனக்கூறி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ரா, சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.