பொறியியல் தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் முதல் இடம்பிடித்த மாணவி வெளிநாட்டில் வேலைபார்க்கும் தந்தையிடம் வீடியோ கால் மூலமாகப் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 27-ம் தேதி வெளியானது. அதில், கடலூர் மாவட்டம் கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் – சாந்தி தம்பதியின் மகள் தரணி, 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் வேல்முருகன், தனது மகளிடம் வீடியோ காலில் பேசினார்.
அப்போது மகளின் வெற்றியைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த அவர், பொறுப்புணர்வோடு தனது மகள் படித்து வெற்றி பெற்றிருப்பதாகக் கண்ணீர் மல்க கூறினார்.
தந்தை அழுவதைக் கண்ட மாணவி தரணி, உணர்ச்சி வசப்பட்டு தந்தைக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகிக் காண்போரை நெகிழ வைத்துள்ளது.