முதுமலை புலிகள் காப்பகம் உள்ள பகுதிகளில் சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகளைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிக்கிறது.
கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், கூடலூர் பகுதியில் சாரல் மழை பெய்தபோது மயில் ஒன்று தோகை விரித்து நடனமாடிய காட்சியை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
இதனிடையே, சாலை ஓரங்களில் உலா வரும் வனவிலங்குகள் அருகே சென்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.