நெல்லை சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க வேண்டும் எனத் திருத்தொண்டர்கள் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படி பராமரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க புதிய கூட்டுக்குழுவைத் தென்காசி மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும், 6 வாரத்தில் கூட்டத்தை நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.
மேலும், கோயில் சொத்து மீட்பு கூட்டத்தில் மனுதாரரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.