சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
திருவள்ளூரில் காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி ஜெகன்மூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன்ஜாமின் கோரி ஜெகன்மூர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கையைத் தடுக்க முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.