பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக கானா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.
ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, நமீபியா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி இன்றும் நாளையும் ஆப்ரிக்க நாடான கானாவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கானா செல்லும் பிரதமர் மோடி, கடந்த 30 ஆண்டுகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.
பின்னர் நாளை மாலை அங்கிருந்து டிரினிடாட் அண்டு டுபாகோவிற்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை மறுதினம் அங்குள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவிலும், ஜூலை 5 முதல் 8-ம் தேதி வரை பிரேசில் நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிரேசில் அதிபர் லுலா டா சில்வா அழைப்பை ஏற்று அங்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையுடன் உறவை வலுப்படுத்துதல், பொறுப்பான ஏ.ஐ தொழில்நுட்ப பயன்பாடு, உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் இந்தியாவின் பார்வைகளை அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு இருதரப்பு கூட்டங்களையும் அவர் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி பிரேசிலில் இருந்து தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவிற்கு செல்லும் பிரதமர் மோடி. 9-ம் தேதி அந்நாட்டு அதிபர் நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.