நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஆஜராகி, சம்மன் அனுப்பிய போதிலும் அதை காவல்துறையினர் திருப்பி அளித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, காவல்துறையின் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதா என காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
சட்டத்தின்படி செயல்படாமல் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மாநில அரசும், காவல்துறைக்கு ஆதரவாக இருப்பது துரதிருஷ்டம் என குறிப்பிட்ட நீதிபதி, இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் வாக்குமூலம் பதிவுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.