மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து மூன்று நாட்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அறிவாலய
ஆட்சி வெறும் விளம்பர மாடல் ஆட்சி என்று தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டதாக கூறியுள்ளார்.
எனவே, இனியும் எத்தனை பெயர்சூட்டு விழாக்கள் நடத்தினாலும், மேடைகளில் முழங்கினாலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளாத திமுக அரசை இன்னும் சில மாதங்களில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக தூக்கியெறிவர் என்பது திண்ணம் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.