சட்டவிரோத பணப்பரிமாற்றம், சட்டவிரோத மதமாற்றம், போலியான பெயரில் வங்கிக்கணக்குகள் என உத்தரப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்த சங்கூர் பாபாவை மாநில பயங்கரவாத தடுப்புப் படை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. தர்கா முன்பு வளையல், தாயத்து விற்று வந்த சங்கூர் பாபா மதமாற்றக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டது எப்படி? பார்க்கலாம் விரிவாக.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் என்ற சங்கூர் பாபா. அண்மையில் அவரது அரண்மனை போன்ற மாளிகையை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது உத்தரப்பிரதேச அரசு.
இந்து பெண்கள், ஏழை, ஆதரவற்றோர், விதவைகள், பலவீனமான பிரிவினரை குறிவைத்து, அவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சங்கூர் பாபாவையும், உடந்தையாக இருந்த அவரது கூட்டாளி நீத்து என்ற நஸ்ரினையும் கைது செய்திருக்கிறது உத்தரப்பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை.
அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகவும் பிஸியான உத்ரௌலா – மான்காபுர் சாலையில் மூன்று ஏக்கர் பரப்பளவில், தனி சாலை, மின்சார வேலி என 70 அறைகளுடன் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடம் இந்துப் பெண்களை மிரட்டி, மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுத்த பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லவ் ஜிகாத் மாடலில் பிராமண மற்றும் ஷத்ரிய பெண்களை மதம் மாற்ற 16 லட்சம் ரூபாய் வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களை மதம் மாற்ற 12 லட்சம் ரூபாய் வரையிலும், பிற வகுப்பினரை மதம் மாற்ற 10 லட்சம் ரூபாய் வரையிலும் சங்கூர் பாபா தலைமையிலான கும்பல் நிதி வழங்கியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மதமாற்ற நடவடிக்கைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டப்படுவதும், அவரது 40 வெவ்வேறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிதி அனைத்தும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், இந்தக் கும்பலுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதையும் பயங்கரவாதத் தடுப்புப் படை விசாரித்து வருகிறது.
அதே நேரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சங்கூர் பாபா மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. சங்கூர் பாபாவுக்கு நிதி அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை அலசி ஆராய்ந்து வருகிறது. சங்கூர் பாபாவின் சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் முகவர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தொடக்கத்தில் சாதாரண சைக்கிளில் தர்கா முன்பு வளையல், தாயத்துக்களை விற்று வந்த சங்கூர் பாபா, மதமாற்ற நடவடிக்கைக்காக மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.