நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.
அந்த பட்டியலில் உள்ள 16 பேரின் பணிகள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரன்முறை செய்து 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களைப் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்காமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து, 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் பணியை வரன்முறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி அவர்கள் அனைவரும், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.