மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனியை சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பூபாலனுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த தங்கப்பிரியாவை, வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கப்பிரியாவை கணவர் பூபாலன் வரதட்சணை கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் பூபாலன், அவரது தந்தை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான செந்தில்குமரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே, மனைவியை தாக்கியதை தனது சகோதரியிடம் பூபாலன் விவரித்துக் கூறும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரான மாமனார் செந்தில்குமரனையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.