மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவால் காலமானார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி – பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க.முத்து. இவர் கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது 77ஆவது வயதில் மு.க.முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருணாநிதியின் கலையுலக வாரிசாக அறியப்பட்ட மு.க.முத்து, திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு எதிராக களமிறக்கப்பட்டார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு, நம்பிக்கை நட்சத்திரம் என மு.க.முத்து நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை.
அரசியலுக்கு வர விருப்பமில்லாத மு.க.முத்து, தனது தந்தை கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனியாகவே வசித்து வந்தார். மு.க.முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து மு.க.முத்துவின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மு.க.முத்து மறைவுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மு.க.முத்து பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.