மதுரையில் வரதட்சணை கொடுமை வழக்கில் கைதான தலைமை காவலர் பூபாலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தேனியை சேர்ந்த சிவா என்பவரின் மகள் தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் பூபாலனுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வரும் தங்கப்பிரியாவை, கணவர் மற்றும் மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு பூபாலன் கடுமையாக சித்ரவதை கொடூரமாக தாக்கியதாகவும் தங்கப்பிரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த நிலையில் நால்வரும் தலைமறைவானதால் மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் லொகேஷன் மூலம் பூபாலன் திருப்பூரில் இருப்பதை கண்டறிந்து விரைந்து சென்ற போலீசார், பதுங்கி இருந்த பூபாலனை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் மாவட்ட கூடுதல் மகளிர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாக்கியவதி காவலர் பூபாலனை வருகின்ற 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட்டார். இதையடுத்து காவலர் பூபாலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.