சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் அவர்களை இடைநீக்கம் செய்த உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது.
பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத மதுவிற்பனை செய்ய ஏதுவாக இருக்கத் தான் ஒரு நேர்மையான அதிகாரி மீது போலிக்குற்றச்சாட்டுகளை வைத்து திமுக அரசு இடைநீக்கம் செய்ததா? இந்த சட்டவிரோத மது விற்பனையை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவாரா? இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை, நாளை என்ன? சுந்தரேசன் அவர்கள் மூடிய 23 சட்டவிரோத பார்களின் திறப்பு விழாவா? சமூகநீதி குறித்து மேடைகளில் விளம்பரப்படுத்திவிட்டு, நேர்மையான காவல் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டு, பின்பக்கம் சட்டவிரோத சாராய விற்பனையை ஊக்குவித்து, சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை, தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.