நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உடனடியாக விவாதிக்க அவைத் தலைவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்காக நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு விவாதத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் 3-வது நாளாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கின.
காலையே இருமுறை அவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பிற்பகலிலும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளி தொடர்ந்தது. இதனால் இரு அவைகளும் வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.