வால்பாறை அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை, நீண்ட நேரம் போராடி, கரையைக் கடந்து வனப் பகுதிக்குள் சென்றது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணை திறக்கப்பட்டது.
சோலையார் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது கேரள வனப்பகுதிக்குட்பட்ட பெருங்கல்குத்து அணைக்குச் செல்கிறது. தற்போது அந்த அணையும் நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வழியாக உபரிநீர் சென்று, கடலில் கலக்கிறது.
இந்த நிலையில், வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, காலாடிஜன்னல் பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் சிக்கியது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அந்த யானை, நீண்ட நேரம் போராடி ஆற்றைக் கடந்து வனப் பகுதிக்குச் சென்றது.