அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவர் பரிந்துரை செய்த கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பலமுறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அமெரிக்க செல்ல அவரை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியது.
அப்போது பேசிய நீதிபதிகள், அமெரிக்காவில் சிகிச்சை பெற இந்திய மருத்துவரின் பரிந்துரை அவசியம் என தெரிவித்தனர். அத்தகைய பரிந்துரை தொடர்பான ஆவணங்களை அசோக்குமார் ஏன் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பதிலளிக்க அசோக் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவர் பரிந்துரை செய்த கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.