பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர், ட்ரம்பைத் தவறாக வழிநடத்துவதாக கூறியுள்ள பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் மிர் யார், பலுசிஸ்தான் விற்பனைக்கு இல்லை என்றும் அமெரிக்க அதிபருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூன் மாதம் ,அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து மதிய விருந்தளித்த டிரம்புடன் மூடிய அறைக்குள் நடந்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளங்கள் மற்றும் அரிய கனிமங்கள் குறித்தும் விவாதித்ததாகக் கூறப் பட்டது.
இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தெற்கு ஆசியாவிலேயே குறைந்த வரியாக, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி விதித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த புதிய எரிசக்தி ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவும், பாகிஸ்தானும் இறுதி செய்திருந்தது.
இந்நிலையில், பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் மிர் யார், அமெரிக்க அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் நாட்டின் உண்மையான புவியியல் அமைப்பு மற்றும் எரிசக்தி வளங்களின் உரிமை குறித்து அமெரிக்க அரசை தவறாக வழிநடத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பஞ்சாப் உட்பட பாகிஸ்தானின் எந்த இடத்திலும் எண்ணெய் இருப்புக்கள் இல்லை என்றும் பயன்படுத்தப்படாத எண்ணெய், இயற்கை எரிவாயு, தாமிரம், லித்தியம், யுரேனியம் மற்றும் அரிய பூமி தாதுக்கள் அனைத்தும் பலூசிஸ்தானில்தான் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் குடியரசுக்குச் சொந்தமான எரிசக்தி வளங்களைப் பாகிஸ்தானுக்குச் சொந்தமானவை என்று சொல்வது தவறானது. அப்படிச் சொல்வது, அரசியல் மற்றும் நிதி ஆதாயத்துக்காக,பலுசிஸ்தானின் செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சி என்றும் மிர் யார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த மே மாதம், இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம் என மிர் யார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களின் மரணத்துக்குக் காரணமான அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களைப் பாகிஸ்தான் ஆதரித்துவரும் நிலையில், பலுசிஸ்தானின் டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அரிய மண் தாதுக்களை எடுக்க அனுமதி அளிப்பது அமெரிக்க செய்யும் மிகப்பெரிய தவறு என்று என்றும் மிர் யார் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம், வரும் நிதியை மீண்டும் ISI நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கே பாகிஸ்தான் ராணுவம் செலவழிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலூசிஸ்தானின் வளங்களிலிருந்து பாகிஸ்தானுக்குக் கிடைக்கும் எந்தவொரு லாபமும் பலூச் மக்களுக்குப் பயனளிக்காது என்றும், மாறாக இந்திய எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பை தீவிரமாக மேற்கொள்ளும் ஜிகாதிகளையே வளர்த்தெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் எரிசக்தி ஒப்பந்தம், தெற்காசியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றும் மிர் யார் எச்சரித்துள்ளார். கூடுதலாக, பலூச் மக்களின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் பாகிஸ்தான், சீனா அல்லது வேறு எந்த வெளிநாட்டுச் சக்தியும் தங்கள் நிலத்தையோ வளங்களையோ சுரண்ட முடியாது என்று கூறியுள்ள மிர் யார், பலூச் மக்களின் இறையாண்மையுடன் யாரும் பேரம் பேச முடியாது என்றும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பலூச் மக்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் தாய்நாடு மற்றும் இயற்கை வளங்களின் மீதான நியாயமான உரிமைகளை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் மிர் யார் கேட்டுக்கொண்டுள்ளார்.