விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.
அதன்படி, களி மண்ணால் செய்யப்பட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகளின் ஆபரணங்களுக்காக உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம் என்றும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும், நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுகட்டுப்பாடு விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.