மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் வரி முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில் மேயரின் கணவருக்கு வரும் 26 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் 3 கவுன்சிலர்கள் சொத்துவரி குறைப்பு விவகாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்த பொன் வசந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுரையில் பணியாற்றி தூத்துக்குடி மாநகராட்சிக்கு பணி மாறுதலாகி சென்ற உதவி ஆணையர் சுரேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ்குமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பொன் வசந்தை நீதிமன்றத்தில் ஆஜபடுத்துவதற்கு முன்பு போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, அவருக்கு அதிகளவில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததால் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் 114வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்பாக பொன் வசந்த் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பொன் வசந்திற்கு வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.