நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள நீர் நிலையில் காவல் நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீஸ்தவா மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட நிலம் நீர் நிலை அல்ல எனவும், மேய்க்கால் நிலம் என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உயர்நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக்கையிலும், காவல் நிலையம் கட்ட அனுமதி அளித்துப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலும், அந்த நிலம் நீர் நிலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே சட்டங்களை மீறிச் செயல்படலாமா எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்மந்தப்பட்ட நீர் நிலையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்திற்கு எதிராக மட்டும் வழக்கு தொடர்ந்துள்ள அறப்போர் இயக்கத்தின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
அத்துடன் நீர் நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும் அகற்றப்பட வேண்டியவை எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களுக்குப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.