நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2ம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார்.
சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மகள் பிரித்திகா ஸ்ரீ அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் பகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை சிறுமி, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, சிறுமியை கடித்து குதறியது. அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் நாயை விரட்டி, சிறுமியை மீட்டனர்.
இதில் சிறுமியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த சிறுமி பிரித்திகா ஸ்ரீக்கு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அம்பை சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் தினமும் அவதிப்படுவதாகவும் தெருநாய்களை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.