மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர்ச் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி, உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் நேரில் ஆஜராகி, உலர்ச் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார்.
கடந்த ஜனவரி மாதம் அளித்த புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த தமிழக அரசு தரப்பு, மனுதாரரின் புகார்த் தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இலவசமாக வழங்கப்பட்ட உலர்ச் சாம்பல், அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவது தொடர்பாக 3 பேர்க் குழு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.