மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரூபன்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
மணமகன் வீட்டார் 300 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டதாகவும், பெண் வீட்டார் 150 சவரன் மட்டுமே வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவருக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுவதாக அறிந்த பிரியதர்ஷினி, மாமனார், மாமியாரை சந்தித்து பேச சென்றார். அப்போது, அவர் அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயலவே, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, கணவர் ரூபன்ராஜ் , மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களை கைது செய்ய வலியுறுத்திய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.