வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த முக்கிய கேள்விகளுக்குத் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தாம் மூன்று நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, Knorr-Bremse நிறுவனத்தைப் பற்றி மட்டுமே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Nordex India Manufacturing Pvt Ltd, Ebmpapst India ஆகிய மற்ற இரு நிறுவனங்களைப் பற்றி ஏன் பதிலளிக்கவில்லை? என்று வினவியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு முதல் Ebmpapst India நிறுவனமும், 2020ம் ஆண்டு முதல் Nordex India நிறுவனமும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன என்பதை அமைச்சரால் மறுக்கமுடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை மட்டும் அனுப்பி, 7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஈர்த்த நிலையில், ஆறு முறை வெளிநாட்டிற்குச் சென்றும் சில ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈர்த்துள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இதுவரை எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் தயங்குவது ஏன் என்றும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் தவறைச் சுட்டிக்காட்டினாலே தமிழகத்தை இழிவுபடுத்திவிட்டதாகத் திசைத்திருப்புவதுதான் திராவிட மாடலின் வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, திரும்பத் திரும்ப திசைத்திருப்புவதை விட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டுப் பயணங்களைப் பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.