ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பைக் கூடுதலாகக் கொள்முதல் செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மூத்த ரஷ்ய அதிகாரி தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியா-ரஷ்யா நீண்டகாலமாகவே ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை வாங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் மொத்த ஆயுத இறக்குமதியில் 36 சதவீதம் ரஷ்யாவின் பங்காகும்.
T-90 பீரங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம் தாங்கிக் கப்பல், ஏகே-203 ரகத் துப்பாக்கிகள் என இரு நாடுகளும் இணைந்து பல முக்கிய ராணுவத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மிக வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூடுதலாக S-400 அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி,பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூறில், இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக, விமானப்படைத் தளபதி A P சிங் தெரிவித்திருந்தார். மேலும் ரஷ்யத் தயாரிப்பான S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஒரு “game-changer” என்றும் கூறியிருந்தார்.
S-400 ஏவுகணை அமைப்பானது, அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பை விட அதிகத் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. S-400 ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். அதாவது சாலை வழியாக இதனைக் கொண்டு செல்ல முடியும். உத்தரவிடப்பட்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
முன்னதாக, சீனா மற்றும் பாகிஸ்தானின் வான் வழி அச்சுறுத்தலுக்கு எதிராகத் தனது வான் பாதுகாப்பை உறுதி படுத்தும் விதமாக, இந்தியா ரஷ்யாவிடமிருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க ஒப்புக்கொண்டது. 2018 ஆம் ஆண்டு, இதற்காக 5.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
S-400 ஐந்து தொகுப்புகளுக்கான ஒப்பந்தத்தின் படி, ஏற்கெனவே ரஷ்யா 3 தொகுப்புகள் S-400 யை வழங்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுப்புகள் 2026-27 க்குள் வழங்கப்படும் என்று ரஷ்யா உறுதியளித்துள்ளது.
சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோவைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பு, இருநாடுகளுக்குமான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்தச் சூழலில், தற்போது கூடுதலாகப் புதிய S-400 அமைப்புகளை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தகவலை, ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான தலைவர் (Dmitry Shugaev) திமித்ரி ஷுகயேவ் உறுதி படுத்தியுள்ளார்.
கூடுதல் S-400 அமைப்புகளுக்கான புதிய பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவக் கூட்டணியை மேலும் பல படுத்தும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது நாட்டின் தேசிய உரிமை என்று கூறிய இந்தியா அமெரிக்காவின் வரிவிதிப்பு நியாயமற்றது என்று கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்தியா அடிபணியவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையிலும் ரஷ்யா மேலும் சலுகை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் இந்தியாவுக்கான ரஷ்யாவின் எண்ணெய் விநியோகம் 10 முதல் 20 சதவீதம் – அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.